முள்ளிவாய்க்கால்
தமிழின அழிப்பு நாள்! 18/05/2009.
15ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – 2024 – சௌத்தென்ட்
சௌத்தென்ட், பசில்டன், மற்றும் எசெக்ஸ் மாநகரில் வாழும் சுமார் 200க்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து, சௌத்தென்ட் கடற்கரையில் தமிழர் இன அழிப்பு நாளை மிகவும் உணர்வெளிச்சியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
இந்நிகழ்வினை திரு.த.நிருபன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களால் அநியாயமாக இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களுக்காக மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, இதுவரைகாலமும் தமிழீழ மண்மீட்புப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இளையோர்கள், தமிழின அழிப்பு சார்ந்து ஆங்கிலத்திலும், தமிழிலும் உரைகளை வழங்கினார்கள்.
“தானே எழுதி உருவாக்கிய முள்ளிவாய்க்கால் வலி சுமந்த பாடல் ஒன்றை “தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் சொர்ணம் ” அவர்களின் அன்பு மகள் செல்வி.முகிலினி அவர்கள் வெளியிட்டு வைத்தார்.“
அடுத்து, முள்ளிவாய்க்கால் பிரதான பொதுச்சுடரினை இறுதிப்போரில் தன் உறவுகளை இழந்தவரான திருமதி. நிசாந்தினி சந்திரதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளும் மிகவும் உணர்வுபூர்வமாக
நூற்றுக்கும் அதிகமான நீரில் மிதக்கும் தீபங்களை ஏற்றி இனவழிப்பில் மாண்டுபோனவர்களை நினைந்து கடலலையில் மிதக்க விட்டனர். அவை எரிந்து முடிந்ததும் கடல் நீரோடு கரைந்து சங்கமித்தன.
அதன் பின்னர் அனைவருக்கும், இறுதியுத்தத்தில் எமது மக்களின் உயிர் ஆகாரமாகத் திகழ்ந்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
சௌத்தென்ட் மற்றும் எசெக்ஸ் பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்கள்.




























































































































