
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 4ஆம் நாள் ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்து,கண்டனப் போராட்டம், துண்டுப்பிரசுரம்,அரசியற்சந்திப்புக்களென எழுச்சியோடு பயணித்து,
18.02.2024 இன்று 4ஆம் நாளில் நெதர்லாந்து பிறேடா மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை நோக்கிப் பயணிக்கும் அறவழிப்போராட்டத்தில் ,மக்கள் எழுச்சியோடு பங்கெடுத்துப் பயணித்து மாலை பெல்சியம் எல்லையினை அடைந்தது.அங்கு பெல்சியம் மக்களின் வரவேற்புடன் ஈருருளிப் பயணம் எழுச்சியோடு பயணித்து மாலை நிறைவடைந்தது.தொடர்ந்து பெல்சியம் நாட்டினை ஊடறுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினைக் கடந்து லுட்சம்பேர்க் நோக்கிப் பயணிக்கவுள்ளது.
தமிழர்களுக்கெதிரான தாங்கொணா அடக்குமுறைகள் ,இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.
தமிழர்கள் இவ்வாறான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக,எமது விடுதலையை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எமது தமிழீழ மண்ணை மீட்டு ,சுதந்திரமாக வாழ முடியும்.இச்சூழமைவில் காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.

இந்த அறவழிப்போராட்டமானது 04.03.2024 அன்று ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது.
எம் தமிழ் உறவுகளே!
தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக வாழும் நாம் ,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.
“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”


















































































