
கண்ணீர் வணக்கம்
11.03.2024
பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்புத்தம்பி சங்கீதன் (தயாபரன்) அவர்களின் பாசமிகு துணைவியார் சாருமதி (றிசபனா) அவர்களின் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரும் அடைந்தேன்.
தங்கள் வாழ்நாளில் தமிழீழத் தாயகத்தை விடுதலை பெற்ற திருநாடாகக் கண்டுவிடலாம் என்ற பெருங்கனவோடு கணவன் – மனைவி இருவருமே தாயக விடுதலைக்குப் பாடுபட்ட பெருமைக்குரியவர்கள்.
புலம்பெயர்ந்து அயலகத்திற்குச் சென்ற பின்பும் தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் பேணிப்பாதுகாக்கும் பெரும்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்களின் உழைப்பு மிகுந்த போற்றுதலுக்குரியது.
விடுதலைப் போராட்டக் களத்தில் பல்வேறு கடுந்துயர்களைத் தாங்கிய சகோதரி சாருமதி அவர்களின் ஈகப்பெருவாழ்வு ஈழத்தாயக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
உற்ற துணையை இழந்து வாடும் தம்பி சங்கீதனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஈழத்தாயகப் பற்றாளர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி சாருமதி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் நாடு


















































































